தமிழ்நாடு

tamil nadu

துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்.. உண்மையை உடைத்து பேசிய நடிகர் விமல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 6:12 PM IST

thudikkum karangal audio launch: நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீடு
துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீடு

சென்னை: 40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'துடிக்கும் கரங்கள்'. தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். கதாநாயகியாக மிஷா நரங் என்பவரும், இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை இயக்குநர் ராம்கோபால் வர்மா படங்களில் பணியாற்றிய ராமி கவனித்துள்ளார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும், கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும், சண்டைப் பயிற்சியை சிறுத்தை கே.கணேஷ்குமாரும் மேற்கொண்டுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக 23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் பேரரசு, வசந்தமணி, திருமலை மற்றும் நடிகர்கள் ரோபோ சங்கர், காளிவெங்கட் , டேனி போப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் ரோபோ சங்கர், "கடந்த ஆறு மாத காலத்திற்குள் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில யூடிபர்கள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள். என் வீட்டில் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள். மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனை இப்படி காயப்படுத்தலாமா?" என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "பெரிய படங்கள் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் கட்டுக்கட்டான பணம் மீண்டும் திரையுலகிற்கு வருவதில்லை. ஆனால் இதுபோன்ற சின்ன படங்கள் வெற்றி வரும்போது அந்த பணம் மீண்டும் அடுத்த படத்திற்காக இங்கேயே புழக்கத்தில் இருக்கும். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ராஜன், "ரஜினியின் கடந்த சில படங்கள் மும்பையில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் தான் அந்த படத்தில் வேலை பார்த்தார்கள். ஆனால் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு, அங்கே ஏதோ பிரச்சனை என்பதால் நிறுத்தப்பட்டு இங்கே சென்னையில் செட் போட்டு எடுத்தார்கள். அது சாத்தியம் என்கிற போது இங்கே தமிழ்நாட்டிலேயே படம் எடுக்கலாமே" என்று கூறினார்.

அவரை தொடர்ந்து நடிகர் விமல் பேசும்போது, "பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும். அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும்" என்று தெரிவித்தார்.

"சினிமாவுக்கு வந்த புதிதில், நம்ம படம் தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டு விட்டேன். ஆனால் அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது. விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடி விட்டன" என கூறினார்.

மேலும் அப்படிப்பட்ட சமயத்தில் என்னை நம்பி வந்த படம் தான் இந்த 'துடிக்கும் கரங்கள்' என்றும், தனக்கு லாக்டவுன் சமயத்தில் கைகொடுத்த படமும் இதுதான் என்றும் கூறினார். குறிப்பாக இந்த படத்தில் நடிப்பதாக தகவல் பரவியதால் தானக்கு 'விலங்கு' உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் விமல், தன் தரப்பில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்கவில்லை என்றும், அழைத்து அவர்கள் வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும் என்றும், அதற்கும் ஒரு நேரம் வரும் என்றும் கூறினார். நடிகர் ரோபோ சங்கரை ஒரு பல்கலைக்கழகம் என்றும், அவரை பார்த்து பல பேர் திருந்தி விட்டதாகவும் கூறிய நடிகர் விமல் தானும் கடந்த 45 நாட்களாக திருந்தி விட்டதாக கூறினார்.

இதையும் படிங்க: 69வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் போட்டியில் மல்லுக்கட்டும் தனுஷ், சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details