தமிழ்நாடு

tamil nadu

சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 5:04 PM IST

Updated : Nov 27, 2023, 8:16 PM IST

Tamil Nadu CM MK Stalin speech: இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TN CM Stalin speech that the central government should conduct a caste-wise census
'மக்கள் தொகை கணக்கெடுப்பு' உடன் 'சாதி வாரிக் கணக்கெடுப்பை' மத்திய அரசு நடத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் முழு திருவுருவச்சிலையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசும் போது, "சென்னை - மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் கொண்டு வந்த பொழுது ஆதிக்க சக்திகள் சிலர் அதை எதிர்த்தார்கள். அதை எதிர்த்து, போராட்டங்களும் நடத்தினார்கள். அதே நேரத்தில், கருணாநிதி வி.பி.சிங்கிற்கு ஆதரவாக இருந்தார்.

உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தற்போது, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு இங்கு வந்துள்ளார். வி.பி.சிங்கிற்கு உத்திரபிரதேசம் தாய் வீடு என்றால் தமிழகம் அவருக்குத் தந்தை வீடு என்றும் அந்த அளவிற்குக் கருணாநிதிக்கும், வி.பி.சிங்கிற்குமான நல்லுறவு இருந்தது. தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் வி.பி.அவர்களின் பேச்சு என்றைக்கும் இருந்ததில்லை என்றார். இன்றைக்கு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வி.பி.சிங் அவர்களுக்குச் சிலை திறந்திருக்கிறேன் இதைவிடப் பெருமை வேரென்ன எனக்கு வேண்டும்.

தற்போது கூட நமக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் கல்வி நிறுவனங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு 2006ஆம் ஆண்டுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. பல்கலைக்கழக மானியக் குழு இணை இயக்குநர் பதவிக்கு இட ஒதுக்கீடே கிடையாது எல்லாமே பொதுப்பிரிவு. 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான். இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை மக்களுக்கான சமூக நீதியைப் பெற்றுத் தருவதில் தவறியதில்லை. குறிப்பாக, இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இட ஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது.

ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கின்ற மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி.சிங். சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை மட்டும் இல்லை, எல்லா மாநிலங்களின் பிரச்சனை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால், பிரச்சனை ஒன்றுதான்! அதுதான், புறக்கணிப்பு.

எங்கெல்லாம் புறக்கணிப்பு ஒதுக்குதல் தீண்டாமை, அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பது தான் சமூகநீதி, அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகளை நாம் செய்தாக வேண்டும்.

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் வி.பி.சிங் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Last Updated :Nov 27, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details