தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவை!

By

Published : Mar 23, 2023, 1:24 PM IST

Updated : Mar 23, 2023, 2:58 PM IST

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு ஆட்சி நடத்த முடியாது என பேசினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சட்டப்பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-ஐ, மறுஆய்வு செய்திடக் கோரும் மசோதாவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என கூறினார். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும் என கூறினார்.

இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மசோதா குறித்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினார்.

விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சூதாட்டம் தடை சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று பல்வேறு முறை அமைச்சர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆன்லைன் ரம்மியினால் பலியாகி உள்ளன என கவலை தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காக... இது சட்டத்தின் மூலமாக ஏற்றப்படவில்லை என் இதயத்தின் மூலமாக ஏற்றப்பட்டது என்று முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என வேல்முருகன் கூறினார்.

விவாதத்தில் பங்கெடுத்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆன்லைன் மட்டுமல்லாமல் அனைத்து வகையான சூதாட்டங்களையும் தடை செய்ய பாஜக முழு ஆதரவை தெரிவிக்கிறது என்றார். ஆன்லைன் விளையாட்டுகளால் மட்டுமல்ல மது போதை, ரம்மியால் கூட பலர் உயிரிழக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசின் சட்டத்துடன் முரண்பாடு இருக்க கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைத்து , மீண்டும் ஓரு சட்டத்தை இயற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டார். ஆளுநரை விமர்சிக்கும் வகையில் சிலர் பேசியதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் விமர்சனம் செய்வது போன்ற வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டதாக கூறினார். ஆனால் ஆளுநர் செய்த தவறை சுட்டிக்காட்ட உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு என அவை முன்னவர் துரை முருகன் குறிப்பிட்டார்.

பாமக சார்பில் பேசிய ஜி.கே.மணி, ஆன்லைன் ரம்மி தற்கொலையை தூண்டவில்லை, நேரடியாக கொலை செய்கிறது என்றார். எடுத்தேன் கவிழ்த்தேன் என கொண்டுவராமல் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளார் முதல்வர் என பாராட்டினார். இந்த சட்ட மசோதாவை பாமக வரவேற்கிறது என ஜி.கே.மணி தெரிவித்தார்.

இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து பேச ஓ.பன்னீரசெல்வத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அதிமுகவின் சார்பாக மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஓ.பி.எஸ். பேசியதற்கு ஈ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் என்ற முறையில் அனுமதி வழங்குவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி கொலையாளி அதிமுக கிளை செயலாளரா? - முதலமைச்சர் கருத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!

Last Updated : Mar 23, 2023, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details