தமிழ்நாடு

tamil nadu

தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிப்பா..? கண்டித்த உயர்நீதிமன்றம்

By

Published : Oct 20, 2022, 7:49 PM IST

Updated : Oct 20, 2022, 8:23 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை: மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதாகக் கண்டித்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை எனவும் கூறியிருந்தார். மேலும் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசின் விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி புனிதா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மருத்துவப் படிப்புகளுக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில் விதிமீறல் - சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

Last Updated :Oct 20, 2022, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details