தமிழ்நாடு

tamil nadu

சிதம்பரம் நடராஜர் கோயில் நந்தன் சுவரைத் தகர்த்து வாசலைத் திறப்பாரா ஆளுநர் ரவி? - திருமாவளவன் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 5:24 PM IST

Thirumavalavan: 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களை கோயில் பூசாரிகளாக்கிவிடுவாரா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 'X' பக்கத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

thirumavalavan-tweet-about-tn-governor-rn-ravi
நடராசர் கோயிலிலுள்ள நந்தன் சுவரைத் தகர்த்து வாசலைத் திறப்பாரா ஆளுநர் - திருமாவளவன்

சிதம்பரம்:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்.4) பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி முதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் நந்தனார் பிறந்த ஊர் ஆதனூர் கிராமத்திற்குச் சென்று 100 பறையர் சமூக மக்களுக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதையும் படிங்க:டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு; நாளை அண்ணாமலை ஆஜராக உத்தரவு!

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு எதிராக இடதுசாரிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். மேலும் சனாதனத்தை உயர்வாகப் பேசும் ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் அருகே உள்ளது நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம். இங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு 100 பறையர் சமூகத்திற்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு இடையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை "X" பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆளுநர் ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதக்கம் வென்றவர்களுடன் நடத்திய ஊக்கம் தரும் கலந்துரையாடலின் போது, முன்னெப்போதுமில்லாத தொழில்முனைவு வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி 2047க்குள் பாரதத்தை #விஸ்வகுருவாக மாற்றும் தேசிய கடமையை உணர்ந்து செயலாற்றுமாறும் வலியுறுத்தினார்." எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது X பதிவில் வெளியிட்டுள்ளது படி, "நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி #ஆர்_என்_ரவி அவர்கள். இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களைக் கோயில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோயிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம்." எனப் பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:“அதிமுக - பாஜக பிரிவு நாடகம் அல்ல” - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details