சென்னை:தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக 22ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை முதல் லேசனா மழை வரையும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (நவ.18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (நவ.17) பிற்பகல் 3.30 அளவில் வங்கதேசம் கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையைக் கடந்தது.
இதைத் தொடர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும் வரும் நாட்களில் லேசான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது."
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: இன்று (நவ-18) வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 11 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.