ETV Bharat / sports

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்..! வெற்றி வாய்ப்பு யாருக்கு..! முழு அலசல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 8:16 PM IST

IND vs AUS World Cup 2023 : 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத இந்திய அணியை நாளை (நவ. 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.

Rohit Sharma
Rohit Sharma

அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 24 மணி நேரம் கூட இல்லாத இந்த இறுதிப் போட்டியை காண கோடிக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றன.

லீக் மற்றும் நாக் அவுட் என விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, நாளை (நவ. 19) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதேபோல் லீக் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் சுதாரித்துக் கொண்டு வீறுநடை போட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்காவிடன் போராடி வெற்றி கண்டது. அந்த ஆட்டத்தில் கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எடுத்து இருந்தாலோ, அல்லது பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து இருந்தாலோ ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறி தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசிய விராட் கோலி, 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசாத்திய திறனை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நெருக்கடி கொடுத்து வரும் பும்ரா, சுழற்பந்துவீச்சில் 16 விக்கெட்டுகள் எடுத்து தன் பலத்தை நிரூபித்து வரும் ரவீந்திர ஜடேஜா என இந்திய அணியின் பலத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பந்துவீச்சு, பேட்டிங் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் அணியாக இந்திய அணி திகழ்கிறது. இதனால் நாளைய இறுதிப் போட்டி மிக கடுமையானதாக இருக்கும் என தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில், முதல் போட்டிக்கு பின் இதுவரை களமிறக்கப்படாத தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இறுதிப் போட்டியில் களமிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சற்று திணறக் கூடியவர்கள் என்பதால் அஸ்வினின் சுழல் மாயாஜாலம் அந்த அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டில் அந்த அணி பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் என பேட்டிங்கில் சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்கள் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் உள்ளிட்ட வீரர்கள் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் காணும் இடமெல்லாம் இந்திய ரசிகர்களின் தலைகளை காண முடியும் என்பது இந்திய அணிக்கு கூடுதல் மகிழ்ச்சிகர தகவல். ஏறத்தாழ 1 லட்சத்து 32 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் இடவசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. போட்டியை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : 20 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.