சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பு, ஆக்சன், டயலாக் டெலிவரி, நடனம் போன்றவற்றால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு உள்ளார். விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். இது பெரும்பாலும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ள நிலையில், நடப்பாண்டு முதல் ஒரு புது முயற்சியை விஜய் மக்கள் இயக்கம் கையில் எடுத்து உள்ளது.
அந்தவகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகம்” நாளை (நவ.18) தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த நூலகத்தைத் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்து துவக்கி வைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வரும் நவ.23 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவையில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், தென்காசியில் 2 இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர் திண்டுக்கல் மேற்கு, சிவகங்கை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 21 இடங்களில் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வைத்து 2022 - 2023ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு “கல்வி விருது” வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடத்தியதற்காகக் கடந்த ஜூலை 11 ஆம் தேதி பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான கடந்த ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” தொடங்கப்பட்டது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் குருதி கொடை, விழியகம் எனப்படும் கண் தானத் திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்குப் பால், முட்டை, ரொட்டி வழங்கும் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 7,007 பேர் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்