தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு: நீதிமன்றத்தில் முறையீடு

By

Published : Jan 21, 2022, 5:05 PM IST

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய காட்சி ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

சென்னை: ஜன.26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அலங்கார அணி வகுப்பு ஊர்திகளில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.

இதையடுத்து டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார காட்சி ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு காட்சி ஊர்திகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களை இடம்பெற உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் முறையிட்டார். இதுதொடர்பாக முறையாக மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கு திங்கள்கிழமை (ஜன.24) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க மு.க. ஸ்டாலின் ஆணை

ABOUT THE AUTHOR

...view details