திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படித்த தனது மனைவியின் ஆராய்ச்சி கட்டுரை திருடப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அலுவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதுகலை பொது அறுவை சிகிச்சை மருத்துவம் படித்தவர் நவீனா. இவருடன் முதுகலை பொது அறுவை சிகிச்சை மருத்துவத்தை நாகலட்சுமி என்பவரும் முடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவி நவீனா திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பில் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரையை திருடி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர் என ஐஏஎஸ் அலுவலர் அவரது சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அது தொடர்பாக கருத்துக்களை திரட்டி 2020 ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட தனது மனைவி திட்டமிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார். இந்தநிலையில் 2017ம் ஆண்டு அவருடைய கருத்துக்களை திருடி வேறு ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளதாக ஐஏஎஸ் அலுவலர் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து திருட்டு குறித்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி முதல்வர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதிவாளர் ஆகியோருக்கும் விசாரணை செய்ய வேண்டும் என மனு அளித்தாக தெரிவித்துள்ளார்.