சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி நின்றுள்ளது. அப்போது காரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளிருந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.
அதையடுத்து காரில் இருந்த 4 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்கி போலீசாரை வெட்ட முயற்சித்துள்ளனர். அதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடது கையில் ரவுடிகள் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளனர்.
அப்போது சுதாரித்த அவர் உடனடியாக குனிந்ததால் தொப்பியில் வெட்டு விழுந்து உள்ளது. அந்த தாக்குதலில் சிவகுருநாதன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் 2 ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.