தமிழ்நாடு

tamil nadu

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்: வெற்றிக்கான மாற்றுவழிகளை சொல்லும் உளவியலாளர்

By

Published : Jun 21, 2022, 5:57 PM IST

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதும், 28 மாணவர்கள் தற்கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டும் உள்ளனர். மாணவர்களின் இது போன்ற செயல்கள் தீர்வுகளாக அமையாது என கூறுகிறார் கல்வியாளரும், உளவியல் ஆலோசகருமான சரண்யா ஜெயக்குமார்.

உளவியலாளர்களின் விளக்கம்
உளவியலாளர்களின் விளக்கம்

சென்னை: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(ஜூன் 20) வெளியிடப்பட்டன. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, மாணவர்களின் தற்காெலையைத் தடுக்கும் வகையில் தன்னம்பிக்கை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கூறினார். மேலும் மாணவர்கள் 14,417 என்ற எண்ணில் தொடர்புகாெண்டு ஆலோசனை பெறலாம் எனவும் அறிவித்தார்.

இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வாரியாக நடைபெற்றச் சம்பவங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை தகவல்களை திரட்டியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேரும், சேலம் மாவட்டத்தில் 2 பேரும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் என 11 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 11 மாணவர்களும், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 மாணவர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மாணவர்களும், சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் என, 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அவர்களில் 16 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதும், 12 மாணவர்கள் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கல்வித்துறை திரட்டிய தகவல்கள் மூலம் வெளிவந்துள்ளன. தேர்வுகளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை கைவிடுக

வரும் ஆண்டுகளில் பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிப்பதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்து வருவதாகவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கல்வி உளவியலாளரும், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான சரண்யா ஜெயக்குமார் கூறும்போது,

'பொதுத்தேர்வு முடிவுகள் நிறைய பேருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் சில மாணவர்களின் பெற்றோர் மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும்; அப்போதே தெரிவித்தேன் எனவும் கூறுகின்றனர். தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு அரசு மீண்டும் வாய்ப்பு அளிக்கிறது. துணைத்தேர்விலும் தோல்வி அடைந்தால், திறந்தநிலைப் பள்ளி மூலமாக தேர்வு எழுதிச்சான்றிதழ் பெறலாம்.

வாழ்க்கையை இனிமேல் நடத்துவது குறித்து தொலை நோக்கு பார்வையுடன் பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஆலோசிக்க வேண்டும். பெற்றோருக்கு கிடைத்த ஏமாற்றத்தை விட பன்மடங்கு குழந்தைகளுக்கு ஏமாற்றத்தை சில தேர்வின் முடிவுகள் கொடுத்து இருக்கும். குழந்தைகளுக்கு மேலும் மனதிற்கு கஷ்டத்தை அளிக்காமல் ஆதரவாக இருந்து அரவணைத்து தூக்கி விடுங்கள்.

உளவியலாளரின் நம்பிக்கை சொல்

அவர்கள் மேலும் நன்றாக வருவார்கள். பெற்றோர் தங்களின் குழந்தைகளை முதலில் நம்ப வேண்டும். அது தான் அவசியமாகும்.

தோல்வி அடைந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதுடன், பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தக் கல்லூரியில் சேரலாம் என்பதைத் தேடி கண்டறிந்து சேருங்கள். உயர் கல்வியில் அதிகளவில் கல்லூரிகள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. இங்கு வாழ்ந்துகொண்டு வாய்ப்புகள் இல்லை என கருதக் கூடாது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுகூட்டல் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details