சென்னை: ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்களுடைய வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய சுதந்திரத்துக்காக தங்களுடைய விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் ஆய்வறிஞர்களால் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் அந்த சுதந்திர வீரர்களின் வாழ்க்கை வரலாறு, பங்களிப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தவும் எதிர்கால தலைமுறை அறியும் வகையிலும் பதிவு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
மேலும், இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவம் என்ற அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 75 வருட சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், பெரிதும் போற்றப்படாத அந்த சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வதும், இளைஞர்களை ஊக்குவிக்கும் அவர்களின் போராட்டத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் தேசத்துக்கான அவர்களின் மகத்தான பங்களிப்பைக் கௌரவிப்பதும் நமது கடமையாகும்" என்றார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர், ஆராய்ச்சி அறிஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் 16 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டங்கள் சென்னை ராஜ்பவனில் மே 2ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. 16 மாநில பல்கலைக்கழகங்களின் ஆய்வறிஞர்கள், 90 போற்றப்படாத சுதந்திர வீரர்கள் பற்றி மேற்கொண்ட சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்த ஆளுநர், ஆய்வுக் குழுவுடனும் கலந்துரையாடினர்.