தமிழ்நாடு

tamil nadu

தமிழ் ஆய்வு மையம் அமைக்க JNU வரலாற்று ஆய்வு நூலகத்தை இடமாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு

By

Published : Aug 10, 2023, 7:52 PM IST

வரலாற்று ஆய்வுக்கான புகழ்பெற்ற நூலகத்தினை மாற்றி, தமிழ் ஆய்வு மையம் அமைக்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற நூலகத்தினை மாற்ற திட்டம்

சென்னை:டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் அமைப்பதை வரவேற்கிறோம் எனவும், உலகளவில் வரலாற்று ஆய்விற்கான சிறப்புமிக்க நூலகத்தை மூடக்கூடாது எனவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலை.யில் சிறப்பு தமிழ் ஆய்வு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.

இது குறித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆராய்ச்சி மாணவர் அஜித் மருதவீரன் கூறும்போது, '' JNU நிர்வாகம் வரலாற்று ஆய்வு மைய நூலகத்தை மூடவும், இங்குள்ள புத்தங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் திடீரென முடிவு செய்துள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மையம் இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்கான உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.

மேலும் நூலகம் அறிஞர்களுக்கு இன்றியமையாத வளமாகும். வரலாற்று ஆய்வு மைய நூலகம் கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்ததாக உள்ளது. மேலும் தமிழ்நாடு குறித்த ஆய்வுகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
தற்போது நூலகம் காலி செய்யப்பட்டு, புதியதாக தமிழாய்வு சிறப்பு மையத்திற்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சமூகத்தின் எந்த ஆலோசனையும் அறிவும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள சிறந்த துறை நூலகங்களில் ஒன்றின் அழிவுக்குச் சமமாக உள்ளது. நூலகத்தினை இடமாற்றம் செய்யப்படும்போது சேகரிப்புகள் சிதறடிக்கப்படுகின்றன. மேலும் அவைகளை தவறான இடத்தில் வைக்கும் நிலை வரும். தீவிர ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இதை நன்கு அறிவர். வரலாற்று ஆய்வு மைய நூலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் இடம் பெறுவதற்கு வரலாற்று மையம் அனுமதிக்கவில்லை என்று காட்டுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டிற்கு மாறாக, உலகளவில் அறியப்படும் வரலாற்று ஆய்வு மையம், தமிழ் மற்றும் தென்னிந்திய ஆய்வுகளின் முன்னோடியாகும்.

மேலும் ஆரம்பம் முதலே முக்கிய வரலாற்றாசிரியர்களான ஆர். சம்பகலட்சுமி, பேராசிரியர் கே. மீனாட்சி, பேராசிரியர் விஜய ராமசுவாமி, பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் கடந்த காலத்தில் தமிழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.

பேராசிரியர் ஆர்.மகாலட்சுமி, பேராசிரியர் ரஞ்சீதா தத்தா மற்றும் பேராசிரியர் எஸ்.குணசேகரன் ஆகியோருடன் தமிழ் மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மிக முக்கியமான மையமாக உள்ளது. கடந்த காலங்களில், ராஜன் குருக்கள் போன்ற அறிஞர்கள் இங்கு கற்பித்துள்ளனர். மேலும் நன்கு அறியப்பட்ட கல்வெட்டு மற்றும் வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஆர். நாகசாமியும் இங்கு வருகை தரும் அறிஞராக இருந்துள்ளார். எங்கள் முன்னாள் மாணவர்களில், சுமதி ராமசுவாமி மற்றும் மீரா ஆபிரகாம் ஆகியோரின் படைப்புகள் கல்வியாளர்களுக்கு நன்கு தெரிந்தவை.

1980-களின் பிற்பகுதியில், வரலாற்று ஆய்வு மையத்தின் முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என்று வலுவாக வைக்கப்பட்ட கோரிக்கையால் தான் நூலகம் வந்தது. இந்த மையம் ஆசிரியர்களின் வெளியீடுகள் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, பல்கலைக் கழகத்தின் மானியக்குழு நிதியை வரலாற்று ஆய்வு மையத்திற்கு வழங்கியது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு காப்பகங்கள் மற்றும் களஞ்சியங்களில் இருந்து ஆசிரியர்களும் மற்ற மூத்த அறிஞர்களும் கொண்டு வந்து வைத்துள்ள மிக முக்கியமான முதன்மை ஆவணங்கள், இரண்டாம் நிலை புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களின் நகல்களைக் கொண்ட நூலகத்தை மேம்படுத்துவதற்கு மையத்தின் ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்தனர்.

வரலாற்று ஆய்வு மையத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும், திடீரென தங்கள் நூலகம் மூடப்பட்டதைக் கண்டு, துணைவேந்தரின் உத்தரவின் பேரில், நூலகத்திலிருந்து புத்தகங்கள் பக்கத்திலுள்ள எக்ஸிம் வங்கியின் பெயரில் உள்ள மற்றொரு நூலகக் கட்டடத்திற்கு அனுப்பப்பட்டன. வரலாற்று ஆய்வு மைய நூலகக் கட்டடத்தில் திடீரென்று 'தமிழாய்வு சிறப்பு மையம்' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகளுக்கான மையம் பல ஆண்டுகளாக இந்தி, உருது, கன்னடம், ஒடியா மற்றும் பிற மொழிகளில் அதன் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கி வருகிறது. தமிழ் இருக்கை கூட 2007ஆம் ஆண்டு முதல் பொறுப்பாளராக அறிஞர் பேராசிரியர் நாச்சிமுத்து (2007-2013) தலைமையில் தொடங்கப்பட்டது. சமீபத்தில், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்திற்கு ரூ.10 கோடி மானியம் வழங்கியது . இதில் 5 கோடி ரூபாய் டிசம்பர் 2022ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மொழி, இலக்கியம் மற்றும் கலாசார ஆய்வுகள் பள்ளியில் புதிய மையத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது, தேவையற்ற செலவில் - வளர்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுக்கு சேவை செய்வதுவரும் ஒரு புகழ்பெற்ற நூலகத்தை அழிப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு நூலகம், மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செல்லும் இடம். தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், வரலாற்றுத் துறை நூலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்க்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை..!

ABOUT THE AUTHOR

...view details