தமிழ்நாடு

tamil nadu

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை

By

Published : Nov 22, 2022, 4:57 PM IST

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர், இன்று இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பிறகு அரசு வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Seven
Seven

சென்னை: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் 15 பேர், இரண்டு படகுகளில் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் சிறைப்பிடித்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்குக்கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதங்கள் எழுதினார்.

இதையடுத்து இலங்கை நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 15 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களில் 7 பேர் இன்று(நவ.22) இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்‌. பின்பு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவர்களை சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அழைத்துச்சென்றனர்.

மீதமுள்ள எட்டு மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்களில் அழைத்து வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ராணி மேரி கல்லூரியை இடிக்க ஜெயலலிதா முயற்சித்தார் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details