தமிழ்நாடு

tamil nadu

சாதித்திமிருடன் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் - கோவை செல்வராஜ்

By

Published : Sep 20, 2022, 7:18 PM IST

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் - கோவை செல்வராஜ்

சாதித் திமிருடன் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை:அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாதி திமிருடன் பேசியதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலக வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னைபசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியைச்சேர்ந்தவர்கள். எங்கள் இனத்தை சேர்ந்தவர் தான் தமிழ்நாடு முதலமைச்சராக முடியும்” எனப் பேசி இருப்பது வெட்கக்கேடான விஷயமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சாதியை வைத்து வாய்ப்பளித்ததில்லை. உழைப்பையும், விசுவாசத்தையும் வைத்து தான் வாய்ப்புகளை அளிப்பார்கள். இதற்கு கடந்தகால வேட்பாளர்களே சாட்சி. அதிமுகவில் சாதி வெறியை ஒழித்தவர், எம்.ஜி.ஆர்.

அப்பேர்ப்பட்ட இயக்கத்தில் செங்கோட்டையன் இவ்வாறு பேசியிருப்பது வெட்கக்கேடான விஷயம். தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கிறோம். எல்லா சமுதாய மக்களுக்கும் ஜெயலலிதாவும் வாய்ப்பளிப்பார். இவ்வாறு பேசியதன் காரணமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தானாக விலகி வெளியேற வேண்டும்.

ஒரு சாதியினர் அதிமுகவை அழிப்பதைத் தொண்டர்கள் உணர வேண்டும். இது ஆபத்தான இடத்தை நோக்கி அதிமுகவை பயணிக்க வைக்கும். கூட்டணி கட்சித் தலைவர்களான பாஜக தலைவர்களை சந்திக்க தேவை ஏற்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வார்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அமித்ஷாவை அவர் பார்ப்பதற்கு காரணம், பெங்களூருவில் அவரது உறவினர் லோக் ஆயுக்தாவால் கைது செய்யப்பட உள்ளதைத் தடுப்பதற்குத் தான். அதற்காக அவர் டெல்லிக்குச்சென்றுள்ளார்.

அதிமுக தலைமை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நல்ல முடிவு வரும். சசிகலா முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிாமிக்கு அளிக்காமல் இருந்து இருந்தால் எடப்பாடி பழனிசாமி எங்கு இருந்து இருப்பார்?. கட்சியை 4ஆக பிரித்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தகுதி கிடையாது. அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சர்க்கஸில் இருக்கும் கோமாளி போல் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் சிரிப்பதற்காக, வாய்க்கு வந்ததை காமெடிக்காக தினமும் எதையாவது பேசி வருகிறார்" எனக் கூறினார்.

சாதித்திமிருடன் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் - கோவை செல்வராஜ்

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை


ABOUT THE AUTHOR

...view details