தமிழ்நாடு

tamil nadu

ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த நபரிடம் கத்திமுனையில் ரூ.5 லட்சம் வழிப்பறி

By

Published : Jan 21, 2023, 3:29 PM IST

ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த நபரிடம் கத்திமுனையில் ரூ.5 லட்சம் வழிப்பறி

சென்னையில் ஏடிஎம் எந்திரத்தில் ஹவாலா பணம் செலுத்த வந்த நபரிடம் கத்திமுனையில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன்(37). டிரை ப்ரூட்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் லட்சக்கணக்கான ஹவாலா பணத்தை கமிஷன் அடிப்படையில் பல்வேறு வங்கி கணக்குகளில் ஏடிஎம் மையம் மூலமாக டெபாசிட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி ரூ. 1 லட்சம் ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்தால், கமிஷன் தொகை ரூ.1,000 என்ற அடிப்படையில் மைதீன் செய்து வந்துள்ளார்.

நேற்றிரவு வழக்கம் போல கொத்தவால்சாவடியை சேர்ந்த நஜீம் என்பவர் கொடுத்த ரூ.9 லட்ச ஹவாலா பணத்தை ஏழு வங்கி ஏடிஎம்களில் செலுத்த மைதீன் சென்றுள்ளார். சென்ட்ரல் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்களில் ரூ.3.78 லட்சம் பணத்தை டெபாசிட் செலுத்திவிட்டு, பின்னர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகத்தில் கர்ஷிப் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மைதீனை வழிமறித்துள்ளது.

அந்த கும்பல் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, மைதீனிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது. இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக மைதீன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details