தமிழ்நாடு

tamil nadu

வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர்கள் - திடுக்கிடும் வாக்குமூலம்

By

Published : Feb 3, 2022, 6:19 PM IST

கோயிலின் படிச்சட்டத்தை திருடி நிஜத்தை போல் வடிவமைத்து, மீண்டும் பொருத்த முயன்ற இரு அர்ச்சகர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

வெள்ளி படிச்சட்டம்
வெள்ளி படிச்சட்டம்

சென்னை: கே.கே. நகரைச் சேர்ந்தவர், வெங்கட்ராமன். இவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், 'மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்தியை தூக்கிசெல்ல பயன்படும் படிச்சட்டம் தோளுக்கினியாள் என்றழைக்கப்படும் எனவும், இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளித் தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளித்தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டதாக' தெரிவித்துள்ளார்.

இந்தத் திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும்; புதிய படிச்சட்டம் ஒன்று வெள்ளித்தகடுகளுடன் செய்து பழையது போன்றே கோயிலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அம்பலமான உண்மை

இந்தப் புகாரின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வெள்ளித்தகடுகள் உரிக்கப்பட்டு திருடியது உண்மை என தெரியவந்ததால், கடந்த 1ஆம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சொத்துக்களை கையாடல், நம்பிக்கை மோசடி, அரசு ஊழியர் நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல், நம்பிக்கை மோசடி, குற்றம் நடந்தது தொடர்பாக தகவல்களை தரமறுத்தல், கூட்டுசதி, கொள்ளையடித்தல், பொருள்களை திருடுதல், ஏமாற்ற பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்டதை உண்மை எனப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளித்தகடுகளை திருடியதாக அந்த கோயிலில் பணியாற்றி வரக்கூடிய அர்ச்சகர்களான ஸ்ரீ நிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 2014ஆம் ஆண்டு இவர்கள் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளித்தகடை உரித்து, எடுத்து திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய வெள்ளித்தகடை கடையில் கொடுத்து உருக்கியதும் தெரியவந்தது.

மேலும் திருடியத் தகடு போல் செய்ய வேண்டும் என்றுகூறி வெள்ளியாகவும், பணமாகவும் நன்கொடை பெற்று திருடி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல், பழைய தகடு போல் தயார் செய்வதற்காக மயிலாடுதுறையிலுள்ள நகைக்கடை ஒன்றில் ஆர்டர் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. புதிதாக செய்ததும் படிச்சட்டத்தில் மீண்டும் பொருத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர்கள்

இதனையடுத்து புதிதாக செய்யப்பட்டிருந்த 15 கிலோ எடை கொண்ட வெள்ளித் தகடை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்தக் கோயிலில் அர்ச்சகராகவுள்ள ஸ்ரீதர் குருக்கள் பணியாற்றியபோது, இந்த வெள்ளித்தகடு திருடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பிடித்து விசாரிக்கும் பணியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக அவதூறு - உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details