தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 10:27 PM IST

Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று (செ.15) வெளியிட்டுள்ளது.

ganesha idols
விநாயகர் சிலைகள்

சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். அதன்படி, வருகிற 18ஆம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். இதற்கான விற்பனையும் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும், சிலை வைத்து, ஒரு வாரத்திற்கு பிறகு அதாவது (3,5,7,9) ஆகிய நாள்கள் கழித்து சிலையை சென்னை மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் சிலையை கரைப்பார்கள். இதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

வழிமுறைகள் என்னென்ன:களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் அல்லது எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த அல்லது மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும் படி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details