தமிழ்நாடு

tamil nadu

சொகுசு கார் விற்பனையில் மோசடி - ஒருவர் கைது

By

Published : Oct 13, 2021, 8:01 PM IST

c
c ()

சொகுசு கார்களை வாங்கி விற்கும் தொழிலில் பணம் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை: மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அண்ணா நகரைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார்.

அப்போது சுதாகரன், தான் பென்ஸ், ஆடி, ஜாகுவார் போன்ற பழைய சொகுசுக் கார்களை வாங்கி அதனை புதுப்பித்து விற்பனை செய்வதாகவும், அதற்கு முதலீடாக பணம் தேவைப்படுவதால் முதற்கட்டமாக 7 கார்களை வாங்குவதற்கு உண்டான பணத்தை அளிக்குமாறு விக்னேஷிடம் கேட்டுள்ளார்.

மேலும், தான் கார்களை விற்பதில் கிடைக்கும் தொகையை இருவரும் சரிசமமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும், அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் எனவும் சுதாகரன் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒப்பந்தம் செய்து 7 சொகுசுக் கார்களை வாங்குவதற்கு உண்டான பணம் சுமார் 1 கோடி ரூபாயை விக்னேஷ் சுதாகரனுக்கு அளித்துள்ளார்.

அதனடிப்படையில் சுதாகரன் அந்தப் பணத்தில் 7 கார்களை வாங்கி விற்று கிடைத்த பணத்தில் பாதியை விக்னேஷுக்கு அளித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக மீண்டும் 7 சொகுசுக் கார்களை வாங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி சுமார் 1 கோடி ரூபாயை விக்னேஷிடம் சுதாகரன் கேட்டுள்ளார்.

ஏற்கனவே அளித்த பணத்திற்கு அதிக லாபம் ஈட்டித்தந்த சுதாகரனை நம்பிய விக்னேஷ் அவர் கேட்ட தொகையை அளித்துள்ளார். இதனையடுத்து சுதாகரன் அந்தப் பணத்தில் மீண்டும் 7 சொகுசுக் கார்களை வாங்கி விற்பனை செய்துள்ளார்.

ஆனால் கார்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் பாதிப் பணத்தை ஒப்பந்தமிட்டபடி விக்னேஷுக்கு தராமலும், வாங்கிய சுமார் 1 கோடி பணத்தை திருப்பித் தராமலும் சுதாகரன் ஏமாற்றி வந்துள்ளார்.

கைதான சுதாகரன்

சுதாகரன் தன்னை ஏமாற்றி வருவதை உணர்ந்த விக்னேஷ் அவரது மோசடி தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுதாகரன் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பெற்ற பணத்தைத் திருப்பி அளிப்பதாக உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்து சுதாகரன் முன் ஜாமின் பெற்றார். இந்நிலையில் அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னும் சுதாகரன் விக்னேஷுக்கு அளிக்க வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சுதாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரிடம் இருந்து ஜாகுவார் சொகுசுக் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சொகுசுக் கார்களை சுதாகரன் யார் யாருக்கு விற்றார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரன் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: LKG சீட் வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி - மதுவந்தி மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details