சென்னை: இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்து செவிலியர்கள் உண்ணாவிரதத்தை முடித்தக் கொண்டனர். இன்று (செப்.26) மாலை கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை ஏற்றுக் கொண்டதன் முடிவில், இதற்காக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு அமைத்து மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் இனசுழற்சி முறையும், முதுநிலை முறையை பின்பற்றியும், சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் கூடுதல் இயக்குநர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரும் மற்றும் உதயகுமார் தலைமையில் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க உறுப்பினர்கள் 5 பேரும் கலந்து கொண்டனர். விரைவில் இவர்களை பணியமர்த்துவதற்கு உடனடியாக ஆவனம் செய்யுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றுக் காலத்தில், சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமான முறையில் பணி அமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்களுக்குத் தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தரத் தன்மையுடைய செவிலியர்களாகப் பணி மாற்றம் செய்யப்பட்டது.
மீதம் உள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, சுமார் 3 ஆயிரத்து 300 காலிப்பணியிடம் இருப்பதால் நிரந்தரத் தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.