தமிழ்நாடு

tamil nadu

எம்பி கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 3:40 PM IST

Mp Gouthama Sigamani case: கள்ளக்குறிச்சி திமுக எம்பி கௌதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கின் விசாரணையை, சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம சிகாமணி
கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம சிகாமணி

சென்னை:தமிழகத்தில் தற்போது உயர் கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த நேரத்தில், செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை, அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அதன் பின்னர் செம்மண் குவாரி முறைகேடு மூலமாக கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. மேலும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டு உள்ளதாகவும், அமலாக்கத் துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு கோப்புக்கு எடுத்துக் கொண்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, இந்த வழக்கை சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இந்த வழக்கு இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க:மேகமலையில் 7,000 ஏக்கர் தனி நபர்களுக்கு பட்டா விவகாரம்: நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details