தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

By

Published : Oct 4, 2022, 2:10 PM IST

நெடுஞ்சாலைத்துறை, நீர்வள மேலாண்மைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு உள்பட பலரும் ஆய்வு செய்தனர்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

சென்னை: துறைமுகம் மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை, நீர்வள மேலாண்மைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது சென்னை மண்டலம் ஐந்தில் உள்ள அலுவலர்களுக்கு ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு, பருவமழை தொடங்குவதற்கு முன்னர் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ''பருவமழைக்கு முன்னரே வடிகால்கள் மற்றும் இதர முன்னெச்சரிக்கை பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் புறநகர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோரை அழைத்து சென்னையின் பணிகளில் ஈடுபடுத்துகிறோம்.

10 விழுக்காடு பணிகள் மீதமுள்ளன. ஆனால், அதனால்கூட பிரச்னை வரக்கூடாது என பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். தொய்வு ஏற்படும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறோம். நீர் மேலாண்மைத்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய் பணிகளை துரிதமாக மேள்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலம் முடிந்த பின்னர் பக்கிங்காம் மற்றும் கூவம் கால்வாய்கள் பராமரிப்பில் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டம் என்பது கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முதலமைச்சர் மற்றும் நான் பலமுறை நேரில் சென்று வலியுறுத்தியபோது, கடந்த ஆட்சியில் ஒத்துழைப்பு வழங்காததன் காரணமாகவே, அந்தப் பணி மீண்டும் தொடங்கப்படாமல் இருந்ததாக அவர் (நிதின் கட்கரி) தெரிவித்தார்.

ஆனால், தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின்படி, அந்த பணியை நிறைவேற்ற அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறது” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 95 விழுக்காடு நிறைவு - மேயர் பிரியா

ABOUT THE AUTHOR

...view details