தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:01 PM IST

Senthil balaji case update: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

மேலும் 27 சாட்சிகளின் வாக்குமூலங்களும் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜனவரி.11) முடிவடைந்ததை அடுத்து, அவர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இதற்கிடையில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், அமலாக்கத் துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணையைத் தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் இந்த மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி அல்லி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கில் ஜனவரி 22 அன்று செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அல்லி, அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 15வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details