தமிழ்நாடு

tamil nadu

பாெறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி!

By

Published : Jul 13, 2023, 8:49 AM IST

2023 - 2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் சுற்றுகள் விபரத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்புகளான பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். அவர்களில் ஜூன் 4ஆம் தேதி வரையில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர்.

மேலும், மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 14ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இதுவரை விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கான வழிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. 2023 - 2024ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 2021 - 2022ஆம் கல்வியாண்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை மதிப்பெண், இயற்பியலில் பெற்ற மதிப்பெண், கணித பாட மதிப்பெண், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி உள்ளிட்டவை ஒன்றாக இருக்கின்றபோது இறுதியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட கட்-ஆப் இரு மாணவர்களுக்கு சமமாக இருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாக விருப்ப பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும்.

இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், அடுத்தடுத்ததாக 12ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்ணும் கணக்கிடப்படும். அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டம் எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை ஜூன் 26ஆம் தேதி www.tneaonline.org என்ற இணையதளத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தரவரிசை தொடர்பாக புகார்களை தெரிவிக்க ஜூன் 30ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்ற ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 384 மாணவர்களும், 72 ஆயிரத்து 558 மாணவிகளும், 17 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

மேலும், பொதுப் பிரிவில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 2,215 மாணவர்களும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 28,425 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய பிரிவில் 1,198 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், 2023ஆம் ஆண்டில் படித்த ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 8 மாணவர்களும், 2023ஆம் ஆண்டிற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் படித்த 9 ஆயிரத்து 951 மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்பில் சேருவதற்கு 53 இலங்கைத் தமிழர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் சுற்றுகள் விபரங்களையும், சுற்றுக்கும் மாணவர்கள் எந்த தேதியில் பதிவு செய்ய வேண்டும், எந்த தேதியில் கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு எந்த தேதியில் வழங்கப்படுகிறது, கல்லூரியில் சேர்வதற்கான விதிமுறைகள் உள்ளிட்டவற்றை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவது குறித்து இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பொறியியல் படிப்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லஞ்ச பணத்தில் வாங்கிய சொத்துக்களை முடக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!

ABOUT THE AUTHOR

...view details