தமிழ்நாடு

tamil nadu

'திருமாவளவன் பேசியது கண்டனத்திற்குரியது!'

By

Published : Oct 24, 2020, 6:05 PM IST

சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தொல். திருமாவளவன் பேசியது கண்டனத்திற்குரியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 1983-ஐ சீரிய முறையில் அமல்படுத்திட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர், 10 காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 53 காவலர்கள் அடங்கிய மொத்தம் 112 பதவிகள் கொண்ட கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.

இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வருடம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், மீன்வளத் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை விளக்கும் கண்காட்சியையும், மீன்வளத் துறை தொடர்பான விவரங்களை விளக்கும் தொடுதிரை வசதிகளையும், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.

மேலும் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை வெளியிடும் மீன்வள களஞ்சியம் என்னும் காலாண்டு இதழின் மூன்றாம் பதிப்பினை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலர் டாக்டர் கே. கோபால், மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் கீ.சு. சமீரன், மீன்வளத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 198 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் மீனவர்களுக்குள் எந்தப் பிரச்சினை வராமல் தடுக்கவும், அமைதி நிலவவும், எல்லையில் தொழில் செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது.

மீன்வளத்துறை 100 ஆண்டாகச் செயல்பட்டுவருகிறது, இதனை விளக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அரசுப் பள்ளியில் படித்தவர், அரசுப் பள்ளி மாணவர்களின் இன்னல் தெரிந்துதான், உள்ஒதுக்கீடு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது மூலம்தான், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியும்" என்று தெரிவித்தார்.

அதற்காகத்தான் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதம் குறித்து, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை ஆளுநர் தெரிவிக்க உள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு நல்லப்பெயர் வரக்கூடாது என்று காழ்ப்புணர்ச்சியுடன் திமுக செயல்படுகிறது. திமுக இதுவரை சட்டப்பேரவையில் கிராம, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உள்ஒதுக்கீடு 7.5 சதவீதம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இது முழுக்க அதிமுக கொண்டுவந்தது.

சமுதாயத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. போற்றி வணங்கக்கூடிய அளவில் பெண்கள் இருக்கின்றனர். பெண்ணை இழிவுப்படுத்தும் வகையில் தொல். திருமாவளவன் பேசியது கண்டனத்திற்குரியது. அதிமுக அரசும் இதனைக் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக, பெண்ணை மதிக்காத கட்சி.

தமிழ்நாடு அரசு கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும், போலியோ தடுப்பூசி, அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசியை அரசு இலவசமாக வழங்கிவருகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிக்கும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details