தமிழ்நாடு

tamil nadu

2021-க்குப் பின் அரசு அதிகாரிகளின் நிலைப்பாடு ஏன் மாறியது? - இரு அமைச்சர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிருப்தி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 4:39 PM IST

KKSSR and Thangam Thennarasu suo moto case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

2021-க்குப் பின் அரசு அதிகாரிகளின் நிலைப்பாடு ஏன் மாறியது? - இரு அமைச்சர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிருப்தி!
2021-க்குப் பின் அரசு அதிகாரிகளின் நிலைப்பாடு ஏன் மாறியது? - இரு அமைச்சர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிருப்தி!

சென்னை: கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும், எனவே சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து கடந்த 2022 டிசம்பர் 13ஆம் தேதி உத்தரவிட்டார். அதேபோல கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பிறபடுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்படி 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திரனின் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர், சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விபரங்களை கடந்த 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. எனவே, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் உள்ளிட்ட மூவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வருவாய் விபரங்கள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி, 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்ட நிலையில், தங்களை விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி திலகம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து கடந்த ஜூலை 20ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி, எல்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக விசாரணைக்கு எடுத்துள்ளார்.

பின்னர் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அமைச்சர்கள் மீதான வழக்கில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை? அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்படும்போது, அதற்கான முறையான விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? எப்போதெல்லாம் நீதி தவறப்படுகிறதோ, அப்போது உயர் நீதிமன்றம் தனது கண்களை மூடிக் கொண்டிருக்காது.

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கத் தவறினால், நீதிபதியாக தனது கடமையில் இருந்து தவறியதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார். அதேநேரம், “தனியாக எந்த நபர்களுக்கு எதிராகவும் செயல்படவில்லை. 2021ஆம் ஆண்டுக்கு முன் முறையாக விசாரணை நடத்திய அதிகாரிகளின் நிலைப்பாடு, கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின் ஏன் மாறியது என்பது தெரியவில்லை” என கருத்து தெரிவித்த நீதிபதி, அரசு மற்றும் அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:"தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டவரால் தாக்கப்படுவதை கட்டுபடுத்த நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details