தமிழ்நாடு

tamil nadu

புதிய தலைமைச் செயலக விவகாரம்; லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 8:03 PM IST

Tamil Nadu new secretariat case: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் 2018இல் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை, முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவு
புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவு

சென்னை:கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது.

அதனை எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டு, இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில், முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து, 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கில் தன்னை இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி அமர்வில் இன்று (செப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை பெற முடியாது என்பதால், தனக்கு நீதி வழங்கும் வகையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு தான் அளித்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என நம்பியதாகவும், ஆட்சி மாற்றத்துக்குப் பின் காவல் துறையினர் நிறம் மாறி விட்டதாகவும் அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயவர்த்தனை வழக்கில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில் பிரமாணப் பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாகவும், சாட்சிகளின் விசாரணை நடைபெறவில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருப்பதால், மேல் முறையீட்டு வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜெயவர்த்தன் 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, அதை முடித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, அவர் அளித்த புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: “நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் தேசத் துரோகிகள்” - உயர் நீதிமன்றம் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details