தமிழ்நாடு

tamil nadu

கரோனா தொற்று பாதிப்பால் மாரடைப்புகள் ஏற்படுகிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 4:00 PM IST

Minister Ma Subramanian: கரோனா தொற்று பாதிப்பினால் ஒவ்வொரு குடும்பத்திலும் உயிர் பாதிப்புகள், கோடிக்கணக்கான அளவில் சொத்து பாதிப்புகள் ஏற்பட்டதன் காரணமாக மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டு மாரடைப்புகள் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் (Cath lab) ஆய்வகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்ட பின்னர் பல்வேறு உட்கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சேவைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

சென்னை மக்களுக்கு மட்டுமல்லாது, பிற மாவட்ட மக்களுக்கும் இந்த மருத்துவமனை சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தினந்தோறும் உள்நோயாளிகள் 200 பேர், புறநோயாளிகள் 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து பெறும் வளர்ச்சியினை, இந்த மருத்துவமனை 6 மாத காலத்தில் அடைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 88,589 பேர் இதுவரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கு முன்பு டபுள் பலூன் எண்டோஸ்கோபி (Double Ballon Endoscopy) மருத்துவ உபகரணம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக Auto MRI என்ற அதிநவீன மருத்துவ உபகரணமும் இங்கு தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று ரூ.6.74 கோடி செலவில் அதிநவீன கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆஞ்சியோகிராம், ஸ்டன்ட், பிறவி குறைபாடு உள்ள இருதய ஓட்டைகள் அடைப்பது, பேஸ்மேக்கர் பொருத்துவது, இருதய வால்வுகள் சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த மருத்துவமனையிலேயே மேற்கொள்ள முடியும்.

சென்னையில் பல்வேறு பெரிய அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கேத்லேப் வசதி உள்ளது. தற்போது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தென் சென்னை மற்றும் வட சென்னை மக்களும் பயனடைவார்கள்.

இதுவரை தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 24 கேத்லேப் உள்ளது. 25வது கேத்லேப் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. மேலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் கேத்லேப் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேத்லேப் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 3 புதிய கேத்லேப் கருவிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் புதிய கேத்லேப் கருவிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 100 சதவீதம் உலக சுகாதார நிறுவனமும், ICMR-ம் கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கும், மாரடைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆனாலும், இருதயவில் நிபுணர்களின் கருத்தின்படி, கோவிட் பாதிப்பு ஏற்பட்ட 2019ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஒவ்வொரு குடும்பத்திலும் உயிர் பாதிப்புகள், கோடிக்கணக்கான அளவில் சொத்து பாதிப்புகள், சிறு தொழில் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டதன் காரணமாக மனஅழுத்தம், மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் அனைவருக்கும் ஏற்பட்டது. அதன் காரணமாகவும் மாரடைப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

இருந்தாலும்கூட, ஒரு வருடத்திற்கு முன்னால் கோயம்புத்தூரில் இருதயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தி, ஆராய்ச்சிகளை நடத்த சொல்லியிருந்தோம். இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எதிர்காலத்தில் நோய் பாதிப்புகள் குறித்து கண்டறிவது தொடர்பாக உலக மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது.

இம்மாநாடு ஜனவரி 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. அதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மருத்து நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் அவர்களுடைய ஆராய்ச்சிகளை பதிவு செய்ய இருக்கின்றனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 82 யானைகள் இறப்பு.. வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details