தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கும் தமிழனின் இதயம்

By

Published : Feb 23, 2022, 7:44 PM IST

Updated : Feb 23, 2022, 10:04 PM IST

தீவிர இதய செயலிழப்பால் உயிருக்குப் போராடிய ஸ்ரீநகரைச் சேர்ந்த பெண்ணுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில், வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு திருச்சியில் மூளைசாவு அடைந்தவரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கும் தமிழனின் இதயம்
காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கும் தமிழனின் இதயம்

சென்னை:ஸ்ரீநகரைச் சேர்ந்த ஷாஸாதி பாத்திமா (33) என்ற பெண்ணுக்கு இதய அறைகளின் சுவர் தடிமனாக மாறுவதால் இதயம் இறுக்கம் அடையும் வகையிலான, ரெஸ்ட்டிரிக்டிவ் கார்டியோமயோபதி (Restrictive cardiomyopathy) என்ற பிரச்னை காரணமாகத் தீவிர இதய செயலிழப்பு பிரச்னை ஏற்பட்டது.

இதற்கு மிக விரைவாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்வதுதான் தீர்வாக இருந்தது. அவரது உடல் நிலை மோசமடையவே கடந்த 2021 டிசம்பர் 31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்ட்ரோப்ஸ் மற்றும் இதர மருந்துகளை அளித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், 2022 ஜனவரி 26ஆம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானமாக வழங்க முன் வந்தனர்.

மருத்துவர்கள் பேட்டி

இதைத் தொடர்ந்து கிரீன் காரிடார் (Green Corridor) உருவாக்கப்பட்டு தானமாகப் பெறப்பட்ட இதயம் 350 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மிக விரைவாக கொண்டு வரப்பட்டு, அதிக ஆபத்து கொண்ட இதய மாற்று அறுவைசிகிச்சை ஷாஸாதி பாத்திமாவுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி, நலமுடன் உள்ளார்.

உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறது

மேலும் இவரின் அண்ணன் கூலி வேலை செய்து வருகிறார். எனவே, ஷாஸாதி பாத்திமாவின் மருத்துவச் செலவை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக் கொண்டது. தன்னுடைய பங்குக்கு உதவியாக, மேல் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மிகக்குறைந்த கட்டணத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது.

இது குறித்து, எம்ஜிஎம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறும்போது, "மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்க முன் வந்த அந்த குடும்பத்தினருக்குப் பாராட்டுகள். தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு மாற்று ஆணையம், உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செயல்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்துகிறது" என்றார்.

இதய செயலிழப்பு - இந்தியாவில் கவனிக்கப்படாத பிரச்னை

தனியார் மருத்துவமனையின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத்துறை இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் கூறும்போது, "உயிரைக் காப்பாற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய ஒருங்கிணைப்பு மற்றும் பல நபர்களின் ஒத்துழைப்பு தேவை. உண்மையில் இது மிகச் சிறந்த குழு முயற்சியாகும்" என்றார் .

அதே மருத்துவமனையைச் சேர்ந்த இதயவியல் மற்றும் இதய செயலிழப்பு திட்டத்தலைவரும் மூத்த மருத்துவருமான ஆர்.ரவிக்குமார் கூறும்போது, "இதய செயலிழப்பு என்பது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படாத பிரச்னையாக உள்ளது.

வழக்கமான சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் இதய செயலிழப்பால் அவதியுறும் நோயாளிகளின் தரமான வாழ்க்கை முறை மற்றும் ஆயுளை அதிநவீன சிகிச்சைகளான இதய மாற்று அறுவைசிகிச்சை மற்றும் இடது வென்ட்ரிக்குலார் அசிஸ்ட் கருவி ( LVAD ) மூலம் மேம்படுத்தலாம்" என்றார்.

இதையும் படிங்க: Lassa Fever: ஆப்ரிக்காவை மையமாகக் கொண்டு பரவும் புதிய காய்ச்சல் - ஒரு விளக்கம்

Last Updated :Feb 23, 2022, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details