சென்னை: கனமழையால் சென்னை திணறிவரும் நிலையில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்னும் இளைஞர், மழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.
தொடர் மழையில் நனைந்து அந்த இளைஞர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார். அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக அருகேயிருந்த அனைவரும் கருதியுள்ளனர்.
இந்த தகவல் காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அந்த நபர் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உதயாவை தனது தோளில் தூக்கியுள்ளார்.
அவரை தோளில் சுந்துகொண்டுவந்து ஆட்டோவில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
அவர் தற்போது மருத்துவமனையில், நலமுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிர் காத்த பெண் போலீஸ்