தமிழ்நாடு

tamil nadu

ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 6:26 PM IST

Complaint against A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார்
ஏ.ஆர்.ரகுமான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார்

சென்னை:இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கதினர், தங்கள் மாநாடு ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை புக்கிங் செய்ததாகவும், அதற்காக அவரிடம் பணம் கொடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியானது நடைபெறாமல் போனதால், கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில், “asicon-2018 Chennai என்ற பெயரில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்ட இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்திர தேசிய மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு திடல் இடப்பட்டது.

இதற்காக சுமார் 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கான சரியான இடத்தை தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெற முடியாத காரணத்தால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதனால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கு அவரின் உதவியாளர் செந்தில் வேலனிடம் கடிதம் கொடுத்தோம்.

அதன் பின்னர், ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலிருந்து காசோலைகள் எங்களுக்கு தரப்பட்டது. அதனை வங்கியில் சென்று கொடுத்தபோது அதில் பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்துவிட்டது. மேலும் இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரின் உதவியாளர் செந்தில் வேலன் ஆகியோரிடம் கேட்டபோது, எங்களுக்கு சரியான பதிலை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், அதற்கு உண்டான ஆவணங்களையும் இணைத்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த புகாரின் அடிப்படையில் தாங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்று கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீப நாட்களுக்கு முன்புதான் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றில் குளறுபடி ஏற்பட்டு சர்ச்சையாகியது. இந்த நிலையில், மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

ABOUT THE AUTHOR

...view details