தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஐ.ஐ.டி.யில் ஊரகத் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

By

Published : Feb 11, 2022, 10:34 PM IST

ஊரகத் தொழில்நுட்ப மையங்கள் தொடக்கம்
ஊரகத் தொழில்நுட்ப மையங்கள் தொடக்கம் ()

சென்னை ஐ.ஐ.டி.யில் ஊரகத் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை ஐ.ஐ.டி, ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஆஷா ஃபார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்நுட்ப மையங்களைத் தொடங்குகிறது. தொலைதூர, கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு கணினி, அறிவியல் கல்வியை இந்த மையங்கள் கிடைக்கச் செய்வதுடன், ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களின் திறனை வெளிக் கொணரச் செய்யவும் உதவும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநரான பேராசிரியர் வி. காமகோடி மிகுந்த முன்னுரிமை அளித்து இதனை செயல்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மா சத்திரம், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் இரண்டு ஊரகத் தொழில்நுட்ப மையங்கள் இன்று (பிப். 11) தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளுக்கு அருகே இதேபோன்ற மேலும் பல ஊரகத் தொழில்நுட்ப மையங்களை நடப்பு ஆண்டில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொழில்நுட்ப அறிவையும், அதன் பயன்களையும் பரவச்செய்ய இந்த மையங்கள் பெருமளவு உதவிகரமாக இருக்கும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை அளிப்பதுடன், தொழில்நுட்ப ரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம் குறித்தும், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநரும் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் இயக்குநருமான வி. காமகோடி கூறுகையில், "நம் நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை ஐ.ஐ.டி பணியாற்றி வருகிறது" என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு தாங்கள் அளித்துவரும் பயிற்சிக்கான முன்முயற்சிகள் குறித்து பேசிய ஆஷா ஃபார் எஜுகேஷன் அமைப்பைச் சேர்ந்த ராஜாராமன் கிருஷ்ணன் கூறியதாவது, "நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் அளவுக்கு இந்த நிரல்மொழிக் கருவிகள் மிக எளிமையானவை. இதனைக் கற்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்று விடுவதுடன், அளவற்ற ஆர்வத்துடன் இதனை கற்று வருகின்றனர். பிற நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட 'code.org' பாடத்திட்டம் போன்ற நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, இதில் நிபுணத்துவத்தை உருவாக்க முடியும் என ஆஷா அமைப்பு உறுதியாக நம்புகிறது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு கணினி, அறிவியல் மற்றும் இதர தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை. அப்படியே கற்றுக்கொண்டாலும் கூட நேரடிக் கணினி அனுபவம் இல்லாமலேயே கற்பிக்கப்படுகிறது" என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரான டி. குணசேகர், "கிராமப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், குறிப்பாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளே படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கும் முயற்சி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது" என்றார்.

9ஆம் வகுப்பு மாணவியான கே. பார்கவி கூறும்போது, "முன்பு நடுநிலைப்பள்ளியில் நாங்கள் படிக்கும்போது கணினியைக் கற்று வந்தோம். இடையில் தொடர்பு இல்லாததால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தோம். தற்போது நாங்கள் மீண்டும் கணினியை கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தலின்போது பேரவைக்கும் தேர்தல் - ஓபிஎஸ் ஆருடம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details