தமிழ்நாடு

tamil nadu

கத்திரிக்கோலால் மனைவிக்கு சரமாரி குத்து - கணவர் தற்கொலை முயற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 7:01 AM IST

Man Stabs Wife with Scissors: குடும்பத் தகராறில் மனைவியை கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி விட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கத்திரிக்கோலால் கொடூரமாக குத்தி விட்டு கணவனும் தற்கொலை முயற்சி
மனைவியை கத்திரிக்கோலால் கொடூரமாக குத்தி விட்டு கணவனும் தற்கொலை முயற்சி

சென்னை: நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இவர், தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி சத்யா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். வெங்கடேசனுக்கும் அவரது மனைவி சத்யாவிற்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், வெங்கடேசன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பிறகு உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று (அக்.2) இரவு வெங்கடேசன் தனது மனைவி சத்யாவிடம் அவர் பயன்படுத்தி வரும் செல்போனை கேட்டதாகவும், அதற்கு அவரது மனைவி தர மறுத்ததால் இருவருக்கும் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தரிக்கோலால் சத்யாவின் வயிற்றில் கொடூரமாக குத்தி தாக்கியுள்ளார்.

மேலும், வெங்கடேசனும் மீண்டும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சத்யாவை வெங்கடேசன் வயிற்றில் பலமுறை குத்தியதால் அலறி துடித்துள்ளார். இதனால் அடுத்த அறையிலிருந்த மகன்கள் இருவரும் சத்யாவைப் பார்த்து அலறி துடித்து கூச்சலிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கொம்புத்துறையா..? கடையக்குடியா..?.. திருச்செந்தூர் அருகே நூதன பிரச்சனை.. அரசு தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

சிறுவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர், ரத்த வெள்ளத்திலிருந்த சத்யா மற்றும் வெங்கடேசன் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கணவர் தாக்கியதில் சத்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கணவர் வெங்கடேசன் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் உரிய விசாரணையானது நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமான முறையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சத்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் ஆன நாள் முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை; நெல்லையில் இளைஞர் வெறிச்செயல்

ABOUT THE AUTHOR

...view details