இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என போலி வாக்குறுதிகளை அளித்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை வேலையிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் சிந்தித்து வருகிறதேயொழிய புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்புவதிலோ கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
மாறாக அனைத்தையும் தனியார்மயமாக்க திமுக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் மூலம் சம்பளம் பெற்று வந்த ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்த திமுக அரசு, தற்போது ஈரோடு மாநகராட்சியின் பணிகளையும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான துப்புரவு மற்றும் இதர பணியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தருணத்தில், 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் நடத்திய ஒரு நாடகம்தான் என் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் சமயத்தில் 'உங்கள் தொகுதியில் நான்' என்ற பிரச்சாரத்தை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இப்போதைய முதலமைச்சர் கோவையில் மேற்கொண்டார்.
அப்போது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விஜயா என்கிற பெண்மணி விளாங்குறிச்சியில் அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்த 400 பேர் இருப்பதாகவும், இவர்களில் 250 பேர் மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிவதாகவும், 14 ஆண்டுகள் பணிபுரிந்த பின்பும் தங்களின் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.