தமிழ்நாடு

tamil nadu

“பழங்குடியினர் சமூகத்தினரை பாம்பு பிடிப்பவர்களாக பார்த்து புறக்கணிக்கிறோம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 7:39 AM IST

TN Governor RN Ravi: பழங்குடியினர் சமூகத்தினரை பாம்பு பிடிப்பவர்களாகப் பார்த்து புறக்கணிக்கிறோம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் பெருமை தினம்
ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.15) “பழங்குடியினர் பெருமை தினம்" மற்றும் "ஜார்கண்ட் மாநிலம் உருவான தின விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிர்சா முண்டாவின் பிறந்த தினம், ஜன்ஜாதிய கௌரவ தினம் எனப்படும் பழங்குடியினர் பெருமை தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “சுதந்திர இயக்கத்தில் நமது பழங்குடியின சகோதர, சகோதரிகளின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் தரும் வகையிலும், அவர்களின் எதிர்கால உரிமை உறுதிபடுத்தப்படுவதை குறிக்கும் வகையிலும் இவ்விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை, ஜன்ஜாதி மக்களுக்கு (பழங்குடியினருக்கு) பெருமை சேர்க்கும் நாளாக, பழங்குடியினர் கெளரவ தினமாக கொண்டாடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.

நமது நாட்டின் பன்முக கலாச்சாரம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தொடர்ச்சியாக சென்று வருகிறது. அதன் மூலம், அதில் ஒற்றுமை நிலவுவதை காண்கிறோம். மாநிலங்களின் உருவாக்கம் என்பது பாரதத்தின் அரசியல் மற்றும் நிர்வாக எல்லைக்காக மறுவரையறை செய்யப்பட்டது.

அந்த வகையில், நமது பழமையான மாநிலங்கள் 100 ஆண்டுகளை எட்டவில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்காக புதிய மாநிலங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கும். ஒரு மாநிலத்தின் மாநில தினத்தை கொண்டாடும்போது, அதன் கூடவே நம் நாட்டின் பன்முகத்தன்மையையும் நாம் கொண்டாடுகிறோம்.

மாநில தினங்கள் அந்தந்த மாநிலத்தின் எல்லைகளைத் தாண்டி, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றன. துரதிஷ்டவசமாக, இன்று நமது அடையாளம் என்பது, நாம் பூர்வீகமாகக் கொண்டுள்ள இடத்தை வைத்து அறியப்படுகிறது. மாநிலத்தை மையமாகக் கொண்டு அடையாள உணர்வு மக்களிடையே மேலோங்கி வருகிறது. இந்த காலத்தில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்ற மாநிலங்களின் அழகு, வளம், புவியியல் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியாதவராகி விடுகிறார்.

நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் மக்களின் ரத்தம், வியர்வை, துன்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் விலை கொடுத்து நம் நாடு சுதந்திரமடைந்தது. துரதிஷ்டவசமாக, நாம் அந்த தியாகிகளை மறக்க ஆரம்பித்தோம். தேசிய சுதந்திர இயக்கம் நம் நினைவிலிருந்து மறையத் தொடங்கியது. தேசிய சுதந்திரப் போராட்டத்தில் நமது பழங்குடியினரின் பங்களிப்பு மகத்தானது.

வடகிழக்கு மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள், ஆங்கிலேயர்களுடன் வீரத்துடன் போரிட்டுள்ளனர். ஆனால், நமது தேசிய சுதந்திர இயக்கத்தில் அந்த மக்களின் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. சுதந்திர தியாகிகளுக்கு நன்றியில்லாத ஒரு சமூகம் முன்னேற முடியாது. எனவே, நாம் சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், நமது தேசிய சுதந்திர இயக்கத்தின் போற்றப்படாத மாவீரர்களை ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டும்.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட பழங்குடியின மக்களும் நமது குடும்ப அங்கத்தினர் என்பதை உணர்த்தவும், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தியாகிகள், தேசிய சுதந்திர இயக்கம் உள்பட நமது தேசத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை நினைவூட்டும் வகையில், ஜன்ஜாதிய கெளரவ தின விழாவை பிரதமர் மோடி தொடங்கினார்.

நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினராக விளங்கும் பழங்குடியினர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது, நம் நாடு எப்படி முன்னேறும்? அவர்கள் நமது தேசிய வளர்ச்சிப் பயணத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பழங்குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் சுரண்டப்பட்டுள்ளனர்.

மருந்து நிறுவனங்களுக்கு விஷ முறிப்பு மருந்து தயாரிக்க உதவுவதிலும், கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் பழங்குடியின சமூகத்தினர் மகத்தான பணி ஆற்றுகின்றனர். ஆனால், அவர்களை பாம்பு பிடிப்பவர்களாக பார்த்து புறக்கணித்து வருகிறோம். எனவே, பிரதமர் மோடி சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், நம்பிக்கையுடன் “சப்கா பிரயாஸ்” என்பதை அறிமுகப்படுத்தினார்.

அனைவரும் சமமாக, ஒன்றாக இருந்தால்தான் நம் நாடு முன்னேறும். எனவே, அவர்களை நமது அங்கத்தினராக கருத வேண்டும். ஒருபோதும் அவர்கள் இழிவாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை முதலில் நாம் மனதார ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கினார். இவற்றின் மூலம் நமது இளமையான மற்றும் பிரகாசமான தலைமுறையினர் வளர்ந்து, அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் சூழலை உருவாக்குவது நமது கடமையாகும்” என்று கூறினார்.

இவ்விழாவில் பத்மஸ்ரீ மாசி சடையன், பத்மஸ்ரீ வடிவேல் கோபால், கமாண்டர் கௌரி மிஸ்ரா (ஓய்வு), பொம்மன், பெல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரூ.2500 செலவில் செயற்கைக்கோள் உருவாக்கி அசத்தல்.. கரூர் மாணவனின் கனவு நனவானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details