சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சில நியாயவிலைக்கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) ISO-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO - 28000 தரச்சான்றிதழும், உணவுப்பொருட்கள் இருப்பு வைப்பதற்குத் தேவையான FSSAI சான்றிதழும் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிகி| 2கிகி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33,377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் கிராமப்பகுதிகளில் 16,994 முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் ஆக மொத்தம் 23,936 நியாயவிலைக் கடைகள் முழு நேரக்கடைகளாக இயங்கி வருகின்றன.