தமிழ்நாடு

tamil nadu

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:28 PM IST

Govt arts and science college: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

govt arts and science college
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 10,372 இடங்களில் மாணவர்கள் செப்.12 முதல் 14 வரையில் நேரடியாக சென்று இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேரலாம் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி அறிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.8.2023 முதல் நடத்தப்பட்டது.

சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன. எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- என்ற பார்க்கலாம் என அதில் கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29 முதல் 31 வரை நடைபெற்றது. ஜூன் 1 முதல் 10 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள் ஆவார்கள். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து ஜூன் 12 முதல் 20 வரை 2ம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 30ஆம் தேதி வரை 84,899 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 36,626 மாணவர்கள், 48,273மாணவிகள் ஆவர். ‌அரசுப் பள்ளிகளில் படித்த 23,295 மாணவிகள் சேர்ந்துள்ளனர். மேலும், கல்லூரியில் காலியாக உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு ஜூலை 4 முதல் 7 வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்ந்த பின்னர் தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இடம் வழங்கியது உட்பட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 10 ஆயிரத்து 372 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாமல் உள்ளனர். இந்த இடங்களில் மாணவர்களை நேரடியாக 12 முதல் 14 வரை சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Bengaluru bandh: அரசு பேருந்தில் பயணிக்கும் அனில் கும்ப்ளே!

ABOUT THE AUTHOR

...view details