தமிழ்நாடு

tamil nadu

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. அரசு மருத்துவரின் அலட்சியம் என பெற்றோர் புகார்!

By

Published : Jun 4, 2023, 1:11 PM IST

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. அரசு மருத்துவரின் அலட்சியம் குறித்து பெற்றோர் புகார்

சென்னை ஆவடி அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததோடு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் பரிந்துரை செய்யாததாக அரசு பெண் மருத்துவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய மகளுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார்

சென்னை:ஆவடி கௌரிபேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(42). இவர் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலையான டேங்க் பேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நேகரிகா ஸ்ரீ (9). 4ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர், நேற்று (ஜூன் 3) மாலை பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், பால் வாங்கிவிட்டு மீதி சில்லரை காசை கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த நேகரிகா ஸ்ரீ, 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக வாய்க்குள் போட்டு விழுங்கி உள்ளார். ஆனால், இது குறித்து பெற்றோரிடத்தில் சொன்னால் திட்டுவார்களோ என பயந்து உடனடியாக தண்ணீரை குடித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் உடல் வியர்த்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே நேகரிகா ஸ்ரீ நடந்ததை பெற்றோரிடத்தில் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள 24 மணி நேர தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, 5 ரூபாய் நாணயம் உள்ளே இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதேநேரம், அங்கு இருந்த மருத்துவர்கள் பெற்றோரிடத்தில் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சிறுமியை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், சிறுமி வலியால் மிகவும் துடித்ததால் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், இது போன்ற பிரச்னைக்கு சிகிச்சை செய்ய முடியாது எனவும், உங்கள் மகள் நன்றாகத்தான் உள்ளார் எனவும், எனவே உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வது நல்லது எனவும் கூறியுள்ளார்.

இதை கேட்ட பெற்றோர் பெண் மருத்துவரிடம் ஆம்புலன்ஸ் மூலமாக சிறுமியை அழைத்துச் செல்ல உதவி கேட்டுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல முடியாது என்றும், நீங்கள் தனியார் வாகனம் மூலம்தான் செல்ல வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அனைவரையும் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லுமாறு அப்பெண் மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த பெற்றோர், அங்கிருந்து ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு சிறுமியை மீண்டும் எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ததில், உணவுக் குழாயின் முகத்துவாரத்தில் 5 ரூபாய் நாணயம் சிக்கிக் கொண்டதை மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.

உடனடியாக, சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தி, உணவுக் குழாயில் உள்நோக்கி கருவி செலுத்தி 5 ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெற்றோர் கடன் வாங்கி 25 ஆயிரம் ரூபாயை மருத்துவ கட்டணமாக செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுமியின் தந்தை ஆவடி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து ஆவடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காவலன் கூறுகையில், "பெரிய மருத்துவமனையில் தான் சிறப்பு வசதி உள்ளது. ஆவடி தாலுகா மருத்துவமனை என்பதால் போதிய வசதிகள் இங்கு இல்லை. நேற்று 9 வயது சிறுமி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டு வந்தது எங்களுக்கு எமர்ஜென்சியாக தெரியவில்லை. மேலும் இது பயப்படும்படி இல்லை என்பதாலும், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் இருப்பதால் சிறுமியை அழைத்துச் செல்ல கூறியிருந்தனர் என்றார்

மேலும், இதைவிட எமர்ஜென்சியாக இரண்டு நோயாளிகள் வந்ததால் எங்களால் ஆம்புலன்ஸ் கொடுக்க முடியவில்லை என என்னிடம் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கூறினார். ஆவடி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நாணயத்தை விழுங்கினால், அதனை எடுப்பதற்கான மருத்துவ வசதிகள் கிடைக்க இரண்டு - மூன்று வருடங்கள் ஆகலாம்" என தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இது போன்று குழந்தைகள் நாணயங்களை விழுங்கினால், அதனை எடுப்பதற்கு அதற்குரிய மருத்துவ வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என ஆவடி பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:உடலுறவின் போது டார்சர் செய்த கணவர்.. நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி.. கடலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details