சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 15ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பின், கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இளங்கோவன், இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாமல் இருந்து வந்தார்.