தமிழ்நாடு

tamil nadu

உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி

By

Published : May 27, 2023, 6:31 PM IST

Etv Bharat

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.34.7 லட்சம் வங்கி கணக்கையும், கலால் குழுமம் தொடர்புடைய ரூ.36.3 கோடி சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை:போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனம், கடந்த ஆண்டு கனிமவள வர்த்தக வியாபாரத்திற்காக சென்னையில் செயல்பட்டு வந்த (kallal group) கல்லல் குழுமத்தில் 114 கோடி ரூபாய் முதலீடு செய்தது. பின்னர் கல்லல் குழுமம் கனிமவள வர்த்தக பயன்பாட்டிற்கு கனரக வாகனங்கள் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து போர்ச்சுகல் நிறுவனத்திற்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதனால், போர்ச்சுகல் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கல்லல் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மோசடி புகார் அளித்தது.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட கல்லல் குழுமத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகளான சரவணன், பழனியப்பன், விஜய் ஆனந்த், அரவிந்த்ராஜ், விஜயகுமார், லட்சுமி முத்துராமன், பிரீத்தா, விஜய் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணன், பழனியப்பன், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் 300 கோடி ரூபாய் வரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கல்லல் குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியது.

அப்போது, பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா குழுமத்திடம் கல்லல் நிறுவனம் பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 16ஆம் தேதி லைகா நிறுவனம் தொடர்புடைய 8-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த இரண்டு குழுமத்திலும் நடைபெற்ற சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் தமிழக அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு பணபரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் பல திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் தொண்டு அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 27) திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது கல்லல் மற்றும் லைகா நிறுவனத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு பணபரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்குண்டான ஆவணங்களை அறக்கட்டளை சமர்பிக்க தவறியது.

இதனையடுத்து, கல்லல் குழுமத்திற்கு சொந்தமான 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளைக்கு சொந்தமான 34.7 லட்ச ரூபாய் வங்கி கணக்கையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details