சென்னை:குமரிக்கடல், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகக் கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அண்ணாநகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை, ராயபுரம், தி.நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, தாம்பரம், முடிச்சூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை நீர்த் தேக்கம்:காலை முதலே பெய்து வரும் மழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும், பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பாலம், ராயபுரம், பட்டாளம், நெல்சன் மாணிக்கம் சாலை, கத்திப்பாரா, கிண்டி என நகரின் சில பகுதிகளில் மழை நீரானது தேங்கியது.
போக்குவரத்து நெரிசல்: சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, 100 அடிச் சாலை, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, ஈ.வே.ரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, உத்தமர் காந்தி சாலை என நகரின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.