தமிழ்நாடு

tamil nadu

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் நேரடி மாணவர் சேர்க்கை!

By

Published : Jul 4, 2023, 12:36 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

college
கலை

சென்னை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 8ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. அதன்படி, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு, 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்த பின்னர், வேறு கல்லூரியில் சேர்வதைத் தவிர்க்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையில், கல்லூரிக் கல்வி இயக்குநரின் இணையதளத்தில் இருந்து அனுமதிகடிதம் பெற்ற பின்னரே சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில், மாணவர்கள் 15 ஆயிரத்து 34 பேர், மாணவிகள் 25 ஆயிரத்து 253 பேர். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31,621 பேர்; மாணவிகள் 44,190 பேர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின் தரவரிசை அடிப்படையில், இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

அதில், ஜூன் 30ஆம் தேதி வரை 84,899 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 36,626 பேர், மாணவிகள் 48,273 பேர். ‌அரசுப் பள்ளிகளில் படித்த 23,295 மாணவிகள் சேர்ந்துள்ளனர். மேலும், குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் விரும்பிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

அதேபோல், கல்லூரியில் காலியாக உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும் உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று (ஜூலை 4) நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நாளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், வரும் 6ஆம் தேதி ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், வரும் 7ஆம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. முன்னதாக, நேற்று(ஜூலை 3) முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதையும் படிங்க: வட்டாரக் கல்வி அலுவலர் பணி தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details