தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் விவரங்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு

By

Published : Mar 8, 2023, 10:39 PM IST

தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் குறித்த விவரங்களை சேகரித்து, அவர்கள் இருக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை உருவாக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டில் வடமாநில நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போலியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் துரிதமாக கையாண்டு கட்டுக்கொண்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாழும் வட மாநிலத்தவர்கள் குறித்த காவல் துறையின் ஆய்வு கூட்டம், காணொளி மூலமாக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் இன்று (மார்ச் 8) நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் மற்றும் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல் துறை சேகரிக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாநில தொழிலாளர்களுடன் காவல் ஆய்வாளர் தொடர்பில் இருக்கும் வகையில் அவர்களில் ஒருவரை ஒருமுனை தொடர்பாளராக நியமிக்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். காவல் ஆய்வாளர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழுவை உருவாக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும்.

சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சந்தித்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்கும் வகையில் தங்களது அலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும். மதுபான கடைகள் அருகே பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காவல் ஆய்வாளர்கள் பிற மாநில தொழிலாளர்களிடம் போலியாக சித்தரித்து வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் காவல் நிலையத்தில் பெறப்பட்டால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மாநிலத் தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதன் காரணங்கள் குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உள்ளூர் ஊடக மற்றும் பத்திரிகையாளர்களிடம் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடும் முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் ஹிந்தியில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உடனடியாக செய்தி வெளியிட வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்க ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோடல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள 9498111191 மற்றும் 94981 81455 எண்களை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பொய்யான வீடியோ மூலம் பரப்பப்பட்ட வதந்தி - எப்.ஐ.ஆர். மூலம் அம்பலமான உண்மை

ABOUT THE AUTHOR

...view details