தமிழ்நாடு

tamil nadu

புயலுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை.. மீட்புப் பணிகள் தீவிரம் - தற்போதைய நிலை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:17 AM IST

Michaung Cyclone affected in chennai: சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலுக்குப் பின்னால், மீட்புப் பணி மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Michaung Cyclone affected in chennai
புயலுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை

புயலுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நவ.27ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிச.2ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, டிச.3ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த மிக்ஜாம் புயல் டிச.4ம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை முதல் அதி கனமழை பெய்தது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இந்த புயலால் சென்னை மாநகரம் மொத்தமும் வெள்ளக்காடாக மாறியது. சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மழை நீர் புகாத வீடும் இல்லை, தேங்காத இடமும் இல்லை என்றானது.

இதனால் சென்னையில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பேருந்து, ரயில், விமான சேவை என அனைத்துமே ரத்து செய்யப்பட்டது. இந்த மிக்ஜாம் புயலால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வரை மீட்புப் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.

மிக்ஜாம் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில், அன்று மாலையில் இருந்தே மழை குறைந்து நேற்று (டிச.5) மழை முற்றிலும் நின்றது. ஆனால் சென்னையில் உள்ள பல இடங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நகரமே வெள்ளக்காடாக தத்தளித்தது. இதனால் மீட்புப்பணி அதிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

இருப்பினும், பல இடங்களில் மின்சார இணைப்பு இன்னும் வரவில்லை, ஆவின் விநியோகம் தாமதாகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் சென்னையில் குறையவில்லை. இருந்தும், சில இடங்களில் படிப்படியாக பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. எந்தெந்த பகுதியில் சீரமைப் பணிகள் நிறைவடைந்துள்ளது, எங்கு தற்போது நடந்து வருகிறது, புயலால் ஏற்பட்ட தேங்கள் என்ன என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

புயல் பாதிப்புகள்: இன்று (டிச.6) காலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் ஏற்பட்ட புயலுக்கு சுமார் 6 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் சுமார் 75 இடங்களில் அகற்றி சரிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது இன்னும் 11 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டுள்ளது.

தற்போது மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதை விவரம்: கணேசபுரம் சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சி.பி.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, சூளைமேடு, அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் கதிர்வேடு சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து சீரமைப்புப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் தாம்பரத்திலிருந்து அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து இயங்கி வருகிறது. புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்ய, இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 60 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: "சென்னை நீச்சல் குளமாக காட்சியளிப்பதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்" - புகழேந்தி

ABOUT THE AUTHOR

...view details