தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு புது உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 2:30 PM IST

jayalalitha death issue: ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jayalalitha death issue
ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் அரசாணை வெளியிட்டது.

மேலும், ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞரும், ஜெ.ஜெயலலிதா ஃபாலோயர்ஸ் கட்சியின் நிறுவன தலைவருமான P.A.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது அந்த மனுவில், ஆணையம் அமைக்கப்பட்டு ரூ.6 கோடி செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களும், அதிமுக கட்சியினரும் காத்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசிடம் கடந்த ஜூலை 9 ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு ஜோசப் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. எல்.முருகனுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம் !

ABOUT THE AUTHOR

...view details