தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக நீட்டிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 7:48 PM IST

Minister Senthil Balaji custody extends: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 12வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, செப்டம்பர் 20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

நவம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், உடல்நல குறைவுக்காக ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 11 முறை நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (டிச.05) முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கபட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜார்படுத்தபட்டார்.

இதனையடுத்து, செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான்.. படகில் சென்று மீட்ட வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details