தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 7:12 PM IST

Madras High Court: பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசீலிக்காத வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர், கோவிந்தராஜன். இவர் மே 3ஆம் தேதி ஆழ்துளைக்கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு சர்வே எண்களுடன் உள்ள நிலத்திற்கான பட்டாவை, தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு பரிந்துரை மனு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை எதிர்த்து, கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் மனுதாரரையும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களையும் விசாரிக்க வேண்டிய பணி 6 மாதங்களாகியும் முடிக்கப்படாததை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து 2 மாதத்திற்குள் மனு மீது முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

மேலும், வருவாய்த்துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறு ஆய்வு மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதை வருவாய்த்துறையினர் முறையாக பின்பற்றவில்லை என்பதை நீதிபதி தன் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையினரின் மெத்தனப்போக்கான செயல் கண்டனத்திற்குரியது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு எதிராக இரண்டு மாத காலத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பிய தென்காசி பத்மநாபேரி குளம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராமத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details