தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:22 PM IST

High court judgements translate into tamil: தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “1968ஆம் ஆண்டு ஜனவரியில், அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இருமொழிக் கொள்கை’ தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அன்றில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழைச் சட்ட ஆட்சி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாக தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் மத்திய சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

இதையும் படிங்க:திமுக தலைவராக மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டு பயணம்.. கடந்து வந்ததும், கடக்கப் போவதும் என்ன..?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவர், கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இந்த தருணத்தில், தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களது பயன்பாட்டிற்காக கொண்டு செல்ல வேண்டும் என்று கருணாநிதியின் வழிநடக்கும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். ‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்று பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழித் தமிழுக்குச் சட்டத் துறையிலும் உரிய இடத்தைப் பெற்றுத் தருவோம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Jan Dhan Yojana: இந்தியாவின் நிதி சேர்ப்பு கொள்கையில் மாபெரும் புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்.!

ABOUT THE AUTHOR

...view details