சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவுக் கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகரப் பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன.
மேலும், மாநிலத் திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், நடப்பில் உள்ள ஆய்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன. மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மின் வாகனக் கொள்கை, தொழில் - 4.0 கொள்கை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, துணி நூல் கொள்கை, கைத்தறிக் கொள்கை, சுற்றுலாக் கொள்கை, தமிழ்நாடு மருத்துவ உரிமைக் கொள்கை, தமிழ்நாடு பாலின மாறுபாடு உடையோருக்கான நலக் கொள்கை ஆகியவற்றைத் தயாரித்து திட்டக்குழு வழங்கி இருக்கின்றீர்.
கழிவு மேலாண்மை கொள்கை, தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, நீர்வள ஆதாரக் கொள்கை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் கொள்கை, வீட்டு வசதிக் கொள்கை என்பன போன்றவற்றையும் விரைந்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நான் மிக முக்கியமாகக் கருதுவது, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள்தான்.
மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகுதான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது.
மாதம்தோறும் 800 ரூபாய் முதல் 1,200 வரை சேமிக்கிறார்கள் என்பதை விட, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும், உழைப்பும், உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது.
இல்லம் தேடிக் கல்வி என்பது கல்வியை பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டு வரவும் பயன்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது அனைவருக்கும் சுகாதாரம் என்பதை உறுதி செய்துள்ளது. வீட்டுக்கே அரசு செல்கிறது என்ற நிர்வாகப் பரவலாக்கல் நடந்துள்ளது.